சில நாட்களுக்கு முன் தமிழ் வலைப்பதிவுகளை படிக்க நேரிட்டது (தற்செயலாக தான்), படிக்கும் பொழுது மனதில் ஏதோ ஒரு சந்தோஷம். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நிறைய தமிழ் புத்தகங்கள், நாவல்கள், கதைகள், பத்திரிகைகள் படித்ததுண்டு. அதற்கு பின் எல்லாம் அப்படியே நின்று விட்டது. எப்பொழுதாவது தமிழ் செய்தித்தாள் படிப்பதோடு சரி. நேற்றைக்கு பிளாக்கர்-இல் ஒரு கணக்கை துவங்கலாம் என்று அதின் அம்சங்களை ஆராய்ந்து கொண்டிருந்தேன். ஆங்கிலத்தில் தான் தொடங்க வேண்டும் என்று ஆரம்பித்தேன். பிளாக்கர்-இல் உள்ள மொழிபெயர்க்கும் அம்சத்தை தேர்வு செய்திருக்கிறேன் (எனக்கு தெரியாமலே), ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு. பின்னர் பதிவு செய்யலாம் என்று தொடங்கியபோது தமிழில் மாறியது. மிகவும் சந்தோஷத்துடன் தமிழிலும் பதிவு செய்ய முடிவு செய்தேன் - அது தான் என்னுடைய முந்தைய பதிவு (நேற்று பதிவு செய்தது).

இன்று கிறிஸ்துமஸ் தினம், நாள் வெகு சிறப்பாக சென்றது. காலையில் புத்தாடை அணிந்து சர்ச்சுக்கு சென்றோம் (நானும் என் மனைவியும்). பிறகு மதிய உணவு குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில். மட்டன் பிரியாணியும் சிக்கன் வருவலும். பின்னர் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதன் பிறகு சூடாக டீ. அங்கிருந்து மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம். வேறொரு நண்பர் வீட்டுக்கு சென்றோம், அங்கு சில நிமிடங்கள். இறுதியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

வீட்டிற்கு வந்ததும் இன்டர்நெட். ஈமெயில் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்த்தேன். சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. பிளாக்கர்-ஐ நோண்டிக்கொண்டிருந்தேன். நண்பர்கள் சாட்டில் வந்தார்கள். மலேசியாவில் வேலை பார்க்கும் நண்பர் வேலை பற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார், பின்பு இந்தியா - பாகிஸ்தானின் தற்போதைய நிலைமை, அமெரிக்காவின் பொருளாதார சீர்குலைவு அதனால் சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்று சரவணபவன் மினி டிபன் போல எல்லா தலைப்புகளிலும் சிறிது அலசிவிட்டு குட் நைட் சொல்லிக்கொண்டோம்.

இன்னும் இரவு உணவு சாப்பிடவில்லை. வெஜிடபுள் பிரைட் ரைஸ், சிக்கன் கிரேவி மற்றும் சிக்கன் பிரை ரெடி ஆகிக்கொண்டிருக்கிறது. ஆக இந்த நாள் இனிய நாளாக முடிந்தது.